
கோலாலம்பூர், ஐனவரி-13, இணைய மோசடிகளுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியை போலீஸ் வரவேற்றுள்ளது.
அதற்கு ஏதுவாக சட்டத்தில் திருத்தம் செய்ய இதுவே சரியான தருணம் என, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசோஃப் கூறினார்.
மோசடிகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால், அதே வேகத்தில் சட்ட அமுலாக்கமும் இருக்க வேண்டியது அவசியமென்றார் அவர்.
பண மோசடிகள் குறிப்பாக சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் துடைத்தொழிப்பது வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் முக்கிய வேலையாகும்.
கடந்தாண்டு மட்டும் இணைய பண மோசடிகளால் கிட்டத்தட்ட 1 பில்லியன் ரிங்கிட் இழப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024-ல், இல்லாத முதலீட்டுத் திட்டங்களை இருப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட மோசடி சம்பவங்கள் 80 விழுக்காடு அதிகரித்துள்ளன.
அதில் ஏற்பட்ட இழப்பு 848.6 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
முந்தைய ஆண்டில் அத்தொகை 472.1 மில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது.
இணைய மோசடிகளுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்ய ஏதுவாக சட்டத் திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, பிரதமர் வெள்ளிக்கிழமையன்று கூறியிருந்தார்.
மத்திய வங்கியான பேங்க் நெகாரா அப்பணிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும், அது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.