ஜொகூர் பாரு, நவம்பர் 20 – லாபகரமான வருமானத்தை உறுதிச் செய்யும் மோசடி முதலீட்டுத் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட 42 வயதான வேலையில்லா நபர் ஒருவர், தனது சுமார் பத்து லட்சம் ரிங்கிட் சேமிப்பை ஒரு மணி நேரத்தில் முழுவதுமாக பறிகொடுத்தார்.
அந்நிய மோசடி கும்பலால் தாம் ஏமாற்றப்பட்டதை பின்னர் உணர்ந்த அவர், நேற்று அச்சம்பவம் தொடர்புல் போலீஸ் புகார் செய்ததை, ஜொகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ராவுப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.
சமூக ஊடகம் வாயிலாக அறிமுகம் ஆன நபர் ஒருவர், “பிட்காயின்” முதலீடு செய்ய சம்பந்தப்பட்ட நபரை தூண்டியுள்ளார்.
அத்திட்டத்தில் முதலீடு செய்தால், 60 நிமிடங்களில் 60 விழுக்காட்டு இலாபத்தை ஈட்டலாம் எனவும் அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளது.
அதனால், அவர்கள் வழங்கிய செயலி இணைப்பில், 126 பணமாற்று நடவடிக்கைகள் வாயிலாக, மொத்தம் ஒன்பது லட்சத்து 89 ஆயிரத்து 170 ரிங்கிட் 44 சென்னை அவ்வாடவர் செலுத்தியுள்ளார்.
எனினும், தம்மிடம் உறுதியளிக்கப்பட்டதை போல, அந்த பணத்தை பின்னர் மீண்டும் மீட்க முடியாமல் போனதால், தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
அந்த மோசடி தொடர்பில் போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் வரையிலாக சிறைத் தண்டனை, பிரம்படிகளுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.