தாப்பா, பிப் 8 – உல்லாசப் பொழுதை கழிக்கச் சென்றபோது தாப்பாவில் பிடோர், கம்போங் போவுக்கு அருகே சுங்கை கெஞ்சூர் ஆற்று நீர் பெருக்கினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரும் , பிள்ளைகள் பராமரிப்பாளரும் அடித்துச்செல்லப்பட்டதை தொடர்ந்து அவர்களில் இதுவரை மூவர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. ஆற்றில் மூழ்கியதாக அஞ்சப்படும் 7 வயது ஹன்னா மிகைலா அசாம் மற்றும் 2 வயது ஹனும் மரிசா ஆகிய இரு சிறார்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4 வயது சிறுவன் ஹாஃபி முஹயட் ஆஸாமின் உடல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்களில் ஒருவரின் உதவியோடு நேற்றிரவு 9.50 மணியளவில் மீட்கப்பட்டது. அந்த சிறுவன் ஆற்றில் மூழ்கிய இடத்திலிருந்து 600 மீட்டருக்கு அப்பால் அவனது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தாப்பா போலீஸ் தலைவர் முகமட் நைம் அஸ்னாவி தெரிவித்தார். இதுவரை ஹாஃபியின் தயாரின் உறவினரான 38 வயதுடைய அஸ்லிண்டா பானி, அவரது 11 வயது மகன் முஹம்மட் ஆடாம் முஹ்கிரிஸ் ரோஸி, குழந்தை பராமரிப்பாளராள 37 வயதுடைய அசுரா பானி ஆகிய மூவர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். சிறுவன் ஹாஃபியின் தாயாரின் உடல் நேற்று மாலையில் மீட்கப்பட்டது. நேற்றிரவு 7.30 மணியளவில் நிறுத்தப்பட்ட தேடும் நடவடிக்கை இன்று காலை மீண்டும் தொடங்கியது.