அராவ், டிசம்பர் 6 – பெர்லீஸ், ஜெஜாவியிலுள்ள, வீடொன்றில் புகுந்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 51 ரிங்கிட்டை கொள்ளையிட்டு சென்ற ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
இரவு மணி ஏழு வாக்கில், வீட்டில் அத்துமீறி நுழைந்த அந்த ஆடவன், அங்கிருந்த நபர் ஒருவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக, அராவ் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் மோசின் மாட் ரோடி தெரிவித்தார்.
அவ்வாடவன் சம்பந்தப்பட்ட நபரின் முகத்தில் குத்தியதோடு, பலமுறை எட்டி உதைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், அங்கிருந்த கைப்பையை சோதனையிட்ட அவன், 51 ரிங்கிட்டை கொள்ளையிட்டு தப்பிச் சென்றான்.
சம்பவத்தின் போது, தாக்குதலுக்கு இலக்கான நபருக்கு நன்கு அறிமுகமான அந்த ஆடவன் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று பின்னேரம் கைதுச் செய்யப்பட்ட அந்த ஆடவனிடமிருந்து, கத்தியும், 51 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்ட வேளை ; அவன் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்ததாக மொசின் சொன்னார்.
விசாரணைக்காக இம்மாதம் 11-ஆம் தேதி வரையில், ஆறு நாட்களுக்கு அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.