கோலாலம்பூர், மார்ச் 11 – சிலாங்கூர் மாநிலத்தின் கெர்லிங் நகரில் விரைவில் அமையவிருக்கும் சைவத் திருக்கோயில் மற்றும் கல்லூரித் திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு அங்கீகரித்துள்ளது.
சுமார் 50 மில்லியன் ரிங்கிட் செலவில் ஏழரை ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் அக்கல்லூரி குறித்து விளக்கமளிக்கிறார் சைவத் திருக்கோயிலின் கலை கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம்.
இத்திட்டம் மூன்று கட்டடங்களாக நிறைவேற்றப்படவுள்ளது. அம்மூன்று கட்டட திட்டமும் நவீன வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் ஒரு பசுமையான இடத்தில் களம் காணும் என்றும் அவர் விவரித்தார்.
சமய ஈடுபாடு கொண்ட மாணவர்கள் இந்த கல்லூரியில் இணைந்து பயில முடியும் எனக் கூறிய அவர், இக்கல்லூரியின் கல்வித் திட்டமானது சைவ ஆகமங்கள், பன்னீரு திருமுறைகள், மெய்கண்ட சாத்திரம் ஆகியவற்றைச் சார்ந்து அமையும் என்றும் கூடுதலாக கணக்கியல் பயிற்சியும் தொலைத்தொடர்பு பயிற்சியும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.
திருக்கோயில் வளாகம், கல்லூரி வளாகம், மாநாட்டு மண்டபம் என மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த திருப்பணியில் இந்துக்கள், சைவச் சிந்தனையாளர்கள் அனைவரும் பங்கேற்றுத் தங்களின் சமயக் கடமையை நிறைவேற்றிக் கொள்ளப் பணிவுடன் அழைக்கப்படுகின்றனர்.
நம் நாட்டில், சைவ முறையிலான சமய வழிமுறையும், கல்வியும் சிறப்புடன் இருக்க, இத்திருப்பணி தடையின்றி உரிய காலத்தில் நிறைவடைய இந்து குடும்பங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதோடு நன்கொடைகளையும் வழங்க முன்வரவேண்டும் என முனைவர் நாகப்பன் கேட்டுக்கொண்டார்