
கோலாலம்பூர், ஜூன் 17 – ம.இ.காவின் முன்னாள் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று காலையில் காலமானதை அறிந்து தாம் கவலை அடைவதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தெரிவித்தார். இந்திய சமூகத்தின் உரிமைகளுக்கு குறிப்பாக கல்வித்துறையில் அவர் எப்போதும் குரல் எழுப்பி வந்துள்ளார்.
உலு சிலாங்கூர் மற்றும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மக்களின் சமூக நலனுக்கு பழனிவேல் கூடுதல் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
வசதிக் குறைந்தவர்களுக்கும் மற்றும் தேவைப்படுவோருக்கும் உதவுவதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார் என நஜீப் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்தார். அவர் ஆற்றிய பங்கும் சேவையும் என்றும் மதிக்கப்படும் என்பதோடு அவரை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.
இந்த வேளையில் பழனிவேல் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு தனது கவலையையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முகநூலில் வெளியிட்ட பதிவில் நஜீப் தெரிவித்துள்ளார்.