
கோலாலம்பூர், மே-29 – சுகாதாரத் தலைமை இயக்குநராக டத்தோ டாக்டர் மகாதர் அப்துல் வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் மகாதர் வஹாப்பின் நியமனம், பொதுச் சேவைத் துறையில் அவரின் அனுபவம், நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகும் என, மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலம் பாராட்டியுள்ளார்.
பொது சுகாதார முறையை வலுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், KKM-முக்குத் தேவைப்படும் ஒட்டுமொத்த மறுசீரமைப்பை உந்தச் செய்யும் தலைமைத்துவ ஆற்றலை மகாதர் கொண்டுள்ளார்.
மக்களின் நலனை முன்னிறுத்தி, பொது சுகாதாரத் துறையில் தைரியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
குறிப்பாக நியாயமான மருத்துவ வசதி, தரமான சேவையளிப்பு, மருத்துவ முன்களப் பணியாளர்களின் நலன் காப்பு என லிங்கேஷ் சுட்டிக் காட்டினார்.
ஆக, முன்னேற்றகரமான மற்றும் அரவணைக்கும் வகையிலான அணுகுமுறையின் மூலம், மலேசிய சுகாதாரத் துறையை டத்தோ டாக்டர் மகாதர் அப்துல் வஹாப் மேம்படுத்துவார் என லிங்கேஷ் வாழ்த்துக் கூறினார்.