
கோலாலம்பூர், மே-3 – நாட்டின் அதிகாரத்தை மற்ற இனத்தார் கைப்பற்றுவதை அனுமதிக்கும் முன் அதன் விளைவுகள் குறித்து மலாய்க்கார இளைஞர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மலாய்க்காரர் அல்லாதோருக்கும் ஆட்சி செலுத்த உரிமையுண்டு என பெரும்பாலான மலாய்க்காரர்கள் எண்ணுகின்றனர்.
அவர்களும் இந்நாட்டு குடிமக்களே; மலாய்க்காரர்கள் போன்று அவர்களும் மலேசியாவை ஆள முடியுமென வாதம் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், மலாய்க்காரர் அல்லாதோர் தங்களை உண்மையிலேயே இந்நாட்டு மக்களாகக் கருதவில்லை.
அவர்கள் இன்னமும் தங்களது பூர்வீக நாட்டை தான் தூக்கிப் பிடிக்கின்றனர்.
அவர்களின் மொழி, கலாச்சாரம், பள்ளிக் கல்வி…. இவ்வளவு ஏன் அரசியல் கட்சிகள் கூட பூர்வீக நாட்டையே சார்ந்துள்ளது.
அவர்கள் நம்மில் ஒருவராக இல்லை; ஒதுங்கியே இருக்கின்றனர்; இதுவே இன்றையச் சமூக நிதர்சனம்.
இது தவிர பொருளாதாரமும் அவர்களின் பிடியில் தான் உள்ளது; இந்த நிலையில் ஆட்சியையும் அவர்கள் கையில் ஒப்படைத்தால் நிலைமை என்னவாகும்?
சொந்த நட்டிலேயே மலாய்க்காரர்கள் நாதியற்று போக வேண்டியது தான் என, chedet எனும் தனது X தளத்தில் அந்த முன்னாள் பிரதமர் பதிவிட்டுள்ளர்.
மலேசியா மீதான மலாய்க்காரர் அல்லாதோரின் விசுவாசம் குறித்து மகாதீர் கேள்வி எழுப்புவது இது முதன் முறையல்ல.
எனவே, அவர் தனது பாணியில் ‘விஷத்தைக்’ கக்கட்டும்; பொருட்படுத்தாமல் அதை நாம் கடந்து செல்வோம் என வலைத்தளவாசிகள் கூறி வருகின்றனர்.