
கிள்ளான், ஜூன்-7 – கிள்ளான், கம்போங் ராஜா ஊடாவில் மசூதிக்கு அருகிலேயே அஸ்தி கலசங்களை வைக்கும் 4 மாடி நினைவகம் கட்டும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
5,000-க்கும் மேற்பட்ட கிராம மக்களில் பெரும்பாலோர் அத்திட்டத்தை எதிர்ப்பதாக, கிராமத் தலைவர் அசார் இப்ராஹிம் கூறினார்.
தங்களின் எதிர்ப்பு அடங்கிய மகஜரை சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவிடம் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக, கிள்ளான் துறைமுகம், பெர்சியாரான் ராஜா மூடா மூசாவில் கிராம மக்கள் நடத்திய அமைதிப் பேரணியின் போது செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
இந்த நினைவகக் கட்டுமானம் குறித்து கிராம மக்களுடன் பேசப்படவில்லை; 2 வாரங்களுக்கு முன்னரே அது குறித்து தெரிய வந்தது என்றார் அவர்.
சடலங்களை எரிக்கும் போது கிளம்பும் புகையால், அருகிலுள்ள குடியிருப்புகள் பாதிக்கும்.
அதோடு மசூதிக்கு வெறும் 50 மீட்டர் தொலைவில் அது அமைக்கப்படுவது, முஸ்லீம்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத செயலாகும்.
1 ஹெக்டர் நிலப்பரப்பில் தனியார் நிலத்தில் கட்டப்படவிருக்கும் இந்த நினைவகத்தை எதிர்த்து, MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர் மன்றத்திடம் இதுவரை 300-க்கும் மேற்பட்ட புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
கிராம மக்கள் குறிப்பாக முஸ்லீம்களின் வசதி மற்றும் நலன் கருதி, அத்திட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.