
கோலாலம்பூர், ஏப் 29 – Taman Usahawan Kepong பகுதியைச் சுற்றி, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உறைந்த பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று வணிக வளாகங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை மணி 10.30 அளவில் புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் வனவிலங்கு குற்றப் பிரிவு மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டன.
நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட உறைந்த பன்றி இறைச்சி மற்றும் உறைந்த வாத்து இறைச்சிகளும் மூன்று வளாகங்களில் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகார்கள் மற்றும் உளவுத் தகவல்களைத் தொடர்ந்து இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு ,பொது ஒழுங்குத் துறையின் வளவிலங்கு குற்றப் பிரிவு , சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரி டத்தோ முகமது ஜாக்கி அஷார் தெரிவித்தார்.
இந்த வளாகங்களில் ஒன்று தலைநகரைச் சுற்றியுள்ள வர்த்தகர்கள் மற்றும் உணவு நிறுவன உரிமையாளர்களின் தேவைகளுக்காக உறைந்த பன்றி இறைச்சிப் பொருட்களை விநியோகம் செய்கிறது.
இங்கு உறைந்த பன்றி இறைச்சி மற்றும் வாத்து இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதோடு ஆவணங்கள் இல்லாத மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட ஏழு நபர்கள், கைது செய்யப்பட்டனர்.
சோதனை செய்யப்பட்ட மற்றொரு வணிக வளாகத்தில், சுமார் 40 பெட்டிகள் சமையல் எண்ணெய் அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.



