
மலாக்கா, மே-13 – மலாக்கா மருத்துவமனையில் 40 பாகை செல்சியல் காய்ச்சால் அனுமதிக்கப்பட்டு வலிப்பு வரும் வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சை யில்லாமல் குழந்தை கைவிடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
வைரலாகியுள்ள அச்சம்பவத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய சுகாதாரம், மனித வளம், ஒற்றுமை ஆகியத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Ngwe Hee Sem, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மலாக்கா மாநில சுகாதாரத் துறை மற்றும் மலாக்கா மருத்துவமனை நிர்வாகம் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கைத் தர வேண்டுமென்றார் அவர்.
அதே சமயம், விசாரணை முடியும் வரை பொது மக்களும் எவ்வித யூகங்களையும் எழுப்ப வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, 22 மாதப் பெண் குழந்தையொன்று மருத்துவமனையில் வலியால் கதறும் 13 நிமிட வீடியோ வைரலாகி, வலைத்தளவாசிகள் மத்தியில் பரிதவிப்பையும் கோபத்தையும் உண்டாக்கியது.
அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறும் ஏராளமானோர் கோரிக்கை விடுத்தனர்.
குழந்தையின் தாயான 37 வயது சித்தி அய்ஷா ரஹிம், சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தனது தாயாருடன் மலாக்கா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தையை சேர்த்துள்ளார்.
குழந்தைக்கு 40 பாகை செல்சியஸுக்கு காய்ச்சல் கொதிக்க, அங்கிருந்த தாதி ஒருவர் இரத்த மாதிரியை எடுத்து விட்டு சென்று விட்டார்.
அங்கேயே காக்க வைக்கப்பட்டதால் திரும்ப திரும்ப கூப்பிட்ட போதெல்லாம் , பொறுமைக் காக்குமாறு மட்டுமே பதில் வந்தது.
கடைசியில் அதிகாலை 1 மணிக்கு காய்ச்சல் முற்றி குழந்தைக்கு வலிப்பு வந்து உடல் விறைத்தே போய் விட்டது.
அதன் பிறகே மருத்துவர்கள் ஓடி வந்து குழந்தையின் உடல் நிலையை சீராக்க முயன்றதாக, தனது facebook பதிவில் சித்தி அய்ஷா கூறினார்.