
ஜெராம் பாடாங், மே-22 – பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறினால், பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவேன் என டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
அப்படியிருக்க, ரஃபிசி பாணியில் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணும் பதவி விலகுவாரா என, பெர்சாத்துக் கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபிசி அணியில் உதவித் தலைவருக்குப் போட்டியிடுகிறார் அமினுடின்.
ஆக, ரஃபிசி தோற்று அமைச்சர் பதவியிலிருந்து விலகினால், அமினுடினும் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவது தானே பொருத்தமாக இருக்குமென, ஜெராம் பாடாங் சட்டமன்றத்திற்கான பெரிக்காத்தான் நேஷனல் ஒருங்கிணைப்பாளருமான சஞ்சீவன் கூறினார்.
இது போக, நெகிரி செம்பிலான் மாநில அரசின் ஆட்சி, அம்னோவின் தயவில் தான் நடக்கிறது.
அம்னோவுக்கு 14 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன; பி.கே.ஆருக்கோ வெறும் 5 இடங்கள் தான்.
ஆக, மந்திரி பெசார் பதவியிலிருந்து அமினுடின் விலகி, அதனை அம்னோவிடம் கொடுத்து விடலாமென, சஞ்சீவன் கேலியாகக் கூறினார்.
துணைத் தலைவர் தேர்தலில் தோற்றால் நிச்சயம் அமைச்சரவையிலிருந்து விலகுவேன் என ரஃபிசி மீண்டும் கோட்டி காட்டியிருந்தது தொடர்பில் சஞ்சீவன் கருத்துரைத்தார்.