ஜோகூர் பாரு, பிப்ரவரி 16 – ஜோகூர் பாரு, கம்போங் வாடி ஆனா கிராமத்தில், பிறந்து மூன்று நாட்களே ஆன தனது பெண் குழந்தையை, சக நாட்டு தோழியிடம் தந்து விட்டு, இந்தோனேசிய பெண் ஒருவர் மாயமானதாக கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத அப்பெண், கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி, தாம் பிரசவித்த குழந்தையை தோழியிடம் தந்து விட்டு காணாமல் போனதாக, ஜோகூர் பாரு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி நோர்ஹபிசா அஹ்மாட் தெரிவித்தார்.
வேலை தேடி செல்வதாக கூறி, இரு நாட்களுக்கு மட்டும் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட அப்பெண், பின்னர் திரும்பி வரவே இல்லை.
ஜனவரி ஏழாம் தேதி, திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதால், அந்த குழந்தையை உடனடியாக சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்ந்த சம்பந்தப்பட்ட தோழி, அது குறித்து உடனடியாக இந்தோனேசிய தூதரகத்திற்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, மாநில சமூக நலத் துறையுடன் இணைந்து சம்பந்தப்பட்ட பெண்ணை அடையாளம் காணும் நடவடிக்கைகளை இந்தோனேசிய தூதரகமும் ஈடுபட்டு வருகிறது.
தற்சமயம், அந்த பெண் குழந்தை, மாநில சமூகநலத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள வேளை ; அதன் தாய் முன் வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.