கோத்தா திங்கி, ஜனவரி 29 – ஜோகூர், கோத்தா திங்கி, பெல்டா ஆயர் தாவாருக்கு அருகில், நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று ஆடவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை மணி 6.49 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
புரோடுவா மைவி மற்றும் புரோட்டான் ஜென் 2 கார்கள் விபத்துக்குள்ளானதாக, கோத்தா திங்கி தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் முஹமட் ஷவாலுடின் அமி நோர்டின் தெரிவித்தார்.
காரில் சிக்கிக் கொண்டிருந்த அம்மூன்று ஆடவர்களும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை பின்னர் மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
அம்மூவரின் விவரங்கள் எதுவும் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், விபத்துக்கான காரணமும் ஆராயப்பட்டு வருகிறது.