
மணிலா, மே-2, பிலிப்பின்ஸ் நாட்டின் பிரபல வனவிலங்குப் பூங்காவில் பிளாஸ்டிக் சிலை என நினைத்து அதனருகில் சென்ற சுற்றுப்பயணி, முதலையிடம் சிக்கி 30 நிமிடங்களுக்கு உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஏப்ரல் 28-ஆம் தேதி Zamboanga Sibugay-யில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பூங்காவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த 29 வயது அவ்வாடவரின் கண்ணில் முதலைப் பட்டது.
ஆனால் அது வெறும் பிளாஸ்டிக் சிலை தான் என நினைத்து, அதனுடன் புகைப்படம் எடுப்பதற்காக அவர் வேலி ஏறி குதித்து விட்டார்.
அருகில் சென்றவரை, Lalay எனும் 4.5 மீட்டர் நீளமுள்ள பெண் முதலை தாக்கி, அவரின் தொடையை தனது தாடையால் இறுக்கியது.
கூண்டுக்கு வெளியே இருந்தவர்கள் இதைக் கண்டு கத்திக் கூச்சலிட்டனர்.
முதலையிடம் சிக்கி 30 நிமிடங்களுக்கு அவர் உயிர் போராட்டம் நடத்தினார்.
பிறகு, பூங்கா பணியாளர் ஒருவர் உடைந்த சிமெண்ட் கல்லை எடுத்து முதலையின் தலையில் அடிக்க, அது அந்த சுற்றுப்பயணி மீதான பிடியைத் தளர்த்தியது.
உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, கைகளிலும் தொடையிலும் 50-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டன.
இதுவோர் ஆபத்தான செயல்; தன்னுயிர் மட்டுமின்றி மற்றவரின் உயிருக்கும் இவர் ஆபத்தை ஏற்படுத்தியிருப்பார்; அந்நபர் இப்போது உயிருடன் இருப்பதே அதிர்ஷ்டம் தான் என உள்ளூர் போலீஸ்காரர் கூறினார்.