
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12-லெம்பாகா தாபோங் ஹஜி எனப்படும் தாபோங் ஹஜி வாரியம் மேற்கொண்ட சிக்கலுக்குரிய 14 முதலீடுகளில் 7 முதலீடுகள் முழுமையான இழப்பில் முடிவடைந்துள்ளன.
இதன் மூலம் பல பில்லியன் ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
2014 முதல் 2020 வரை தாபோங் ஹஜியின் நிதி நிர்வாகம் குறித்து விசாரணை நடத்திய அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையைத் தொடர்ந்து, இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அசிசான் நாடாளுமன்றத்தில் நேற்று இந்த விவரங்களை வெளியிட்டார்.
அந்த 14 சிக்கலான முதலீடுகளால் தாபோங் ஹஜிக்கும் அரசாங்கத்திற்கும் ஏறக்குறைய 13 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
நிதி அமைப்பைக் காப்பாற்ற, 2018-ஆம் ஆண்டின் மறுசீரமைப்பின் போது அரசாங்கம் 10.2 பில்லியன் ரிங்கிட் மீட்பு நிதியை வழங்கியது.
மேலும், 2018 முதல் 2025 வரை தாபோங் ஹஜி நிறுவனம் 2.6 பில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்தது.
ஆனால், சந்தை நிலவரங்களால் மட்டுமே இந்த இழப்பு ஏற்படவில்லை என அமீர் ஹம்ஸா சுட்டிக்காட்டினார்.
மாறாக, போதிய ஆய்வு இன்மை, பலவீனமான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் தாபோங் ஹஜி அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி சில அதிக ஆபத்துள்ள முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம் என, RCI அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த தாபோங் ஹஜி விவகாரம் மீதான விசாரணைத் தொடரும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.



