இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர், ஜூன் 10- இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமான தகவலை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாக ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த வேளையில் அன்னாரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபம் மற்றும் இரங்கலையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவின் அடையாளத்தை மாற்றியதோடு பல புதிய கலைஞர்களை உருவாக்கிய பெருமையயும் பாரதிராஜாவுக்கு உண்டு .
திரையரங்குகளில் இருந்த செட்டிங் கலாசாரத்தை உடைத்து, கேமராவை கிராமத்து மண்ணிற்கு எடுத்துச் சென்ற புரட்சியாளராக பாரதிராஜா விளங்கினார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா எனத் தமிழ் சினிமாவின் மைல்கற்களாகக் கருதப்படும் சிறந்த திரைப்படங்களை உருவாக்கியதன் மூலம் இந்திய அரசின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதையும் தமிழக அரசின் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



