
ஜோகூர் பாரு, ஜூலை 23 – உலகக் கோப்பை காற்பந்து இறுதிப் போட்டியின்போது உணவகத்தில் சண்டையில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவித்த, இரு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அந்த ஐவர் மீது, கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5.40 மணியளவில் தாமான் டாயாவிலுள்ள (Taman Daya) உணவகத்தில் சண்டையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களுக்கு 700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் ஏழு நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அதே நேரத்தில் 15 மற்றும் 17 வயதுடைய இருவரின் நன்னடத்தை அறிக்கை சமர்ப்பிக்க செப்டம்பர் 1-ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மோதலில் 15 முதல் 38 வயதுடைய 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சமூக வலைதளங்களில் நாற்காலிகள் வீசி சண்டையிட்ட 37 விநாடி காணொளி வைரலானது.



