
கோலாலம்பூர், மே 22 – ஈரான் போர் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி குறித்து எழுந்த கவலைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருள் விநியோகம் போதுமான அளவில் இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இதற்கு முன்னர், துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் வள மாற்றுத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ பாடிலா யூசோப் (Datuk Seri Fadillah Yusof), தற்போது ஜூலை மாதம் வரை போதுமானதாக இருக்கும் எரிசக்தி வழங்கலை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, வெளிநாடுகளில் இருந்து கூடுதல் எரிபொருள் பெறும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், தேவையான விநியோகத்தைப் பெறுவதற்காக ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி, பெட்ரோனாஸ் தனது எரிபொருள் நிலையங்களில் ஜூன் மாத இறுதி வரை எரிபொருள் விநியோகம் பாதுகாப்பாக இருக்கும் என அறிவித்திருந்தது.
மலேசியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 50 விழுக்காட்டை பெட்ரோனாஸ் வழங்குகிறது; மீதமுள்ள தேவையை நாட்டில் செயல்படும் பிற எண்ணெய் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன.



