
கோலாலம்பூர், ஜூலை-17- ஜூலை 9-ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட கட்டடக் கலை மாணவர் சித்து ஹ்போன் மாவ் (Sithu Hpone Maw) மரணமடைந்திருப்பதை, UCSI பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மியன்மாரைச் சேர்ந்த சித்துவின் மறைவுக்கு ஃபேஸ்புக் பதிவு வாயிலாக அது இரங்கல் தெரிவித்தது.
சித்துவின் மனப்பான்மை, அர்ப்பணிப்பு மற்றும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவர் கொண்டு வந்த மகிழ்ச்சிக்காக அவர் நினைவுக் கூறப்படுவார் என UCSI கூறியது.
அப்பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போன வெளிநாட்டு மாணவர் குறித்து புகார் கிடைத்ததாக செராஸ் போலீஸ் முன்னதாகக் கூறியிருந்தது.
சித்துவை தொடர்பு கொள்ள முடியாததால், பல்கலைக்கழக நிர்வாகம் அப்புகாரைச் செய்திருந்தது.
இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்; ஆனால் அது எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை.
இரண்டாமாண்டு மாணவரான சித்து கடைசியாக ஜூலை 9-ஆம் தேதி செராஸ், Taman Connaught, Angkasa Condo அடுக்குமாடியில் உள்ள அவரது வாடகை வீட்டில் காணப்பட்டார்.