
கிள்ளான், மார்ச் -6-காப்பாரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது தனது வாகனத்தை மோதியதாக சந்தேகிக்கப்படும்
நபருக்கு எதிராக ஐந்து நாள் தடுப்புக் காவல் உத்தரவை போலீசார் பெற்றனர்.
அந்த மோதலில் துப்பாக்கி ஏந்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவன் மரணம் அடைந்த வேளையில் அவனது நண்பன் காயமடைந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை எளிதாக்குவதற்காக 49 வயது நபருக்கான தடுத்து வைக்கும் உத்தரவு பெறப்பட்டதாக வட கிள்ளான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் S. விஜய ராவ் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சம்பந்தப்பட்ட நபர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதோடு அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவருவதாக விஜய ராவ் கூறினார்.
இறந்தவர் கொலை, கொலை முயற்சி மற்றும் கும்பலாக கொள்ளையிட்டது உள்ளிட்ட 23 குற்றப் பின்னணிகளை கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த சந்தேக நபருக்கு 10 முன் குற்றப் பதிவுகள் உள்ளதோடு அவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130V இன் கீழ் தேடப்படுகிறார்.
கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.



