
கோலாலம்பூர், ஜூன்-4-கோலாலம்பூர் கலைநிகழ்ச்சி திரையரங்கில் அண்மையில் நடைபெற்ற “KIDS GOT TALENT MALAYSIA” போட்டியில், கெடா, பாடாங் செராய் என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவி பிரித்திஷா ஷண்முகம் மூன்றாம் நிலை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் பங்கேற்ற இக்கடுமையான போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 200 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், ‘பல்வகை திறமைகள்’ பிரிவில் களம் கண்ட 20 போட்டியாளர்களில் ஒருவராக பிரித்திஷா தன் அசாத்திய திறமையை நிரூபித்தார்.
கண்களைக் கட்டிக்கொண்டு, எந்தவொரு பொருளையும் தொடாமல், நுகராமல், பார்க்காமல் தனது அசாத்திய உள்ளுணர்வின் மூலம் மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு பன்னாட்டு நடுவர்களையும் பார்வையாளர்களையும் அவர் வியப்பில் ஆழ்த்தினார்.
தமது இந்த வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த ‘அச்சீவர்ஸ் மைண்ட் அகாடமி’யின் மாஸ்டர் அழகன் கோவிந்தன் மற்றும் ‘பிரைன் குரோ’ அமைப்பின் பஹ்லு ராம் சிந்தி ஆகியோருக்கு பிரித்திஷா நன்றி தெரிவித்துள்ளார்.
இவ்வெற்றியின் மூலம் உலகப் புகழ்பெற்ற “AMERICA GOT TALENT” போட்டிக்கான தேர்வுச் சுற்றிலும் கலந்துகொள்ளும் பிரகாசமான வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் பிரத்திஷா மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த அசாத்தியத் திறமைகளைக் கொண்டுள்ள இம்மாணவி மேலும் சாதிக்க வாழ்த்துவோம்…



