
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் போதைப்பொருள் பயன்படுத்திய நபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 51 பேரை போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர்.
முன்னதாக, போதைப்பொருள் உட்கொண்டு, ஓரினச்சேர்க்கையாளர்கள் கும்மாளம் அடித்த சொகுசு ஷோட்டல் ஒன்றிலிருந்து சுயநினைவற்ற நிலையில் அவ்வாடவர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
ஆனால், அவர் உயிரிழந்து விட்டத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து கோலாலம்பூர் போலீஸ் படை களத்திலிறங்கி, அதுபோன்று கும்மாளம் அடிப்போரின் இரகசிய இடங்களைக் குறிவைத்து நள்ளிரவில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டது.
இச்சோதனைகளின் போது, போதைப்பொருள் விநியோகம் மற்றும் சட்டவிரோதக் கூட்டங்களில் ஈடுபட்டதாக 51 நபர்கள் கைதாகினர்.
கைதுச் செய்யப்பட்ட பலரின் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் methamphetamine உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
சமூகச் சீரழிவை உண்டாக்கும் இத்தகைய இரகசியப் போதைப்பொருள் ‘பார்ட்டிகளுக்கு’ எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ Hussein Omar Khan எச்சரித்தார்.



