
புத்ராஜெயா, மார்ச்-6- 6ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்திய வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆடவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
31 வயது சி. லோகேந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில், உலு பேராக்கில் உள்ள ஒரு கோவிலில் இந்த சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அப்போது வெறும் 15 வயது தான்.
இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு, குவாலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட லோகேந்திரனுக்கு 10 ஆண்டு சிறையும் 2 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டிருந்தது.
அதோடு, சிறை காலத்தில் ஆலோசனை சிகிச்சை பெறவும், விடுதலைக்குப் பிறகு 2 ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை கடந்தாண்டு உயர் நீதிமன்றமும் நிராகரித்தது.
இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதே தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.



