புத்ராஜெயா, ஜூன் 8 – சிலாங்கூரில் சுங்கை பெசார் (Sungai Besar) மற்றும் சபாக் பெர்னாம் ஆகிய இடங்களில் இந்தோனேசியர்களை சட்ட விரோதமாக கடத்துவதில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு கும்பலை குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது. புத்ராஜெயாவில் உள்ள குடிநுழைவு தலைமையகத்தை சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் குழு வியாழக்கிழமை இரவு மணி 8.05-க்கு தொடங்கிய நடவடிக்கையில் 12 இந்தோனேசியர்களைக் கண்டுபிடித்ததாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ (Ruslin Jusoh) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்களின் தகவல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நவவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். குடிநுழைவுத்துறை அமைத்த குழுவின் மூலம் மூன்று சந்தேக நபர்கள் ஓட்டிச் சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட பின் அம்மூவரும் கைது செய்யப்பட்டனர். அந்த ஓட்டுநர்களில் 47 வயதுடைய ஒருவர் தலைவர் என்றும் 31 மற்றும் 40 வயதுடை இதர இருவர் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் இதுவரை 15 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.