
கோலாலம்பூர், ஜூன்-9-செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்கத்தை சிதைக்காமல் நேர்மை மற்றும் தார்மீக பொறுப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை வலியுறுத்தும் வகையில் இருக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
தொழில்நுட்ப முன்னேற்றம் மனித விழுமியங்களைச் சிதைக்கக் கூடாது என்றும், மாறாக மனித மாண்பு, சமூக நீதி மற்றும் உலக சமூகத்தின் நல்வாழ்வை வலுப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சி இருந்தபோதிலும், மோதல்கள், போர்கள், சமத்துவமின்மை மற்றும் அடக்குமுறை ஆகியவை இன்னும் நீடிப்பதால், உலகம் இப்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தை விடப் பெரிய பிரச்னைகளை எதிர்கொள்கிறது என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.
இன்று தோக்யோ பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தபோது, ’மனித-இயந்திர நாகரிகத்தில் மனித விழுமியங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்ப முன்னேற்றத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இருப்பினும், அது வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நமது கற்பனைகளுக்குள் கூட நுழைந்தால், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மிகப் பெரியவை.
மனித பண்புகளை சீரழிக்காமல் , அவற்றை வளப்படுத்த மனிதகுலத்திற்குச் சேவை செய்யும் அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அமைப்புகள் மக்களுக்குப் பொறுப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்கும், இயந்திரங்களால் பெற முடியாத மனசாட்சி, கருணை, இரக்கம், பொறுப்பு, நேர்மை மற்றும் சக மனிதர்கள் மீதான அக்கறை போன்ற விவகாரங்களை சமூகம் தொடர்ந்து நினைவில் கொள்வதற்கும் இது அவசியமாகும் என்று அவர் கூறினார்.
ஜப்பானிய பிரதமர் Sanae Takaichi யின் அழைப்பின்பேரில் நாளைவரை நீடிக்கும் மூன்று நாள் அலுவல் பயணமாக அன்வார் நேற்று தோக்யோ சென்றடைந்தார்.



