
லேடாங், ஜூலை-6 – ஜோகூர் தேர்தலில் பாஸ் கட்சியின் ஆதரவு, எதிர்காலத்தில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியுடன் இணைவதற்கான உத்தரவாதம் அல்ல என, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அமாட் சாஹிட் ஹமிடி தெளிவுப்படுத்தியுள்ளார்.
_”அரசியல் களத்தில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு என்பது கூட்டணி கட்சியின் கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்தே அமையும்”_ என்றார் அவர்.
லேடாங்கில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், BN கூட்டணியின் நீண்டகால அரசியல் இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எந்தவோர் அரசியல் கூட்டணியும் நிரந்தரமானது அல்ல என்பதையும் மீண்டும் வலியுறுத்தினார்.
குறிப்பாக, கொள்கை ரீதியான முரண்பாடுகள் நீடிக்கும் பட்சத்தில், எதிர்கால கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அவரது கருத்து மறைமுகமாக உணர்த்துகிறது.
ஜோகூரில் வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடும் நிலையில், அது போட்டியிடாத தொகுதிகளில் பாரிசானுக்கே பாஸ் தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும் என அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், அம்னோ – பாஸ் இடையிலான அரசியல் ஒத்துழைப்பு ஜோகூரிலிருந்தே மீண்டும் உயிர்ப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது



