
கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – தாபோங் ஹாஜி (TH) நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த புதிய அரச ஆணைய விசாரணைக் குழுவை (RCI) அமைக்க வேண்டுமென பெரிக்காத்தான் நேஷனல் (PN) மற்றும் UMNO வலியுறுத்தியுள்ளன.
பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் (Datuk Seri Takiyuddin Hassan), முந்தைய RCI அறிக்கையின் கண்டுபிடிப்புகள் திரித்து பயன்படுத்தப்பட்டு, தாபோங் ஹாஜி பெரிய நிதி முறைகேட்டில் சிக்கியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
எனவே, முந்தைய RCI விசாரணை முடிவடைந்த காலத்திலிருந்து தற்போது வரையிலான தாபோங் ஹாஜி நிர்வாகம் மற்றும் நிதிநிலையை புதிய RCI ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
இதனிடையே, UMNO உச்சமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ரச்லான் ரஃபியும் (Datuk Mohd Razlan Rafii) புதிய RCI அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தார்.
தாபோங் ஹாஜி சொத்துகள் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் அல்லது அவை குறிப்பிட்ட தரப்பினருக்கு விற்கப்பட்டதா என்பதையும், மாற்றப்பட்ட சொத்துகள் எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன, அவை ஏன் மீண்டும் TH-க்கு வழங்கப்படவில்லை என்பதையும் விசாரணை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.



