
ஷா ஆலாம், ஏப்ரல்-23-சிலாங்கூர், தாமான் மேடானில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தைக் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு, உள்ளூர் மக்களின் கவலைகள் மற்றும் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஒரு சுமூகமான தீர்வைக் காண முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
இதற்காகப் புதிய நிலத்தைத் தேடும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
ஆலய நிர்வாகமும், மாற்று நிலத்திற்கு புதிய விண்ணப்பத்தை முன்வைத்திருப்பதாக அவர் சொன்னார்.
என்றாலும், திட்டமிடலுக்கு ஊராட்சி மன்றத்தின் அனுமதிக் கிடைத்தப் பிறகே, முழு கட்டடத்தை எழுப்ப ஆலய நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்படுமென்றார் அவர்.
அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை எட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், இதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில், பதிவுச் செய்யப்படாத ஆலய விவகாரம் குறித்து சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் Afif Bahardin எழுப்பியக் கேள்விக்கு பதிலளிக்கையில், பாப்பாராயுடு அவ்வாறு சொன்னார்.
தாமான் மேடான் PJS 4-கிலுள்ள அக்கோவிலை, மலாய் முஸ்லீம்கள் அதிகமுள்ள மக்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசின் முடிவை எதிர்த்து, PJS 2 குடியிருப்பாளர்கள் 80 பேர் கடந்த பிப்ரவரியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.



