
கோலாலம்பூர், மே-15,-கோலாலம்பூர், துங்கு அசிஸா மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம், தற்போது ஒரு சுமூகமான முடிவுக்கு வந்துள்ளது.
ஏப்ரல் 7-ஆம் தேதி தனக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்ததாகவும், மஞ்சள் காமாலையால் குழந்தை வார்ட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டதாகவும் Muhammad Harraz Haziq எனும் 24 வயது தந்தை முன்னதாகக் கூறினார்.
மறுநாள் வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலையில், இரத்த பரிசோதனைக்காகக் குழந்தையை கொண்டுச் சென்ற தாதி பின்னர் அதிகாலை 5 மணிக்கு குழந்தையைக் கொண்டு வந்து ஒப்படைத்தார்.
ஆனால், திரும்பி வந்தது ஆண் குழந்தையாக இருந்ததை கண்டு அவரின் மனைவி அதிர்ச்சியடைந்தார்.
உடனே தாதியிடம் விளக்கம் கேட்டபோது, அவரோ “உங்களுக்கு உண்மையிலேயே பெண் குழந்தை தான் பிறந்ததா?” என சற்று எகத்தாளமாகக் கேட்டுள்ளார்.
பொறுப்பில் இருந்த மருத்துவரிடம் விளக்கம் பெறும் முயற்சியும் தோல்வியில் முடியவே, வேறு வழியின்றி ஏப்ரல்10-ஆம் தேதி Harraz போலீஸில் புகார் செய்தார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், தற்போது இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைச்சு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அடையாளச் சரிபார்ப்புக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களிடமும் அவர்களது உண்மையான உயிரியல் குழந்தைகள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.
discharge நடைமுறையின் போது ஏற்பட்ட நிர்வாகத் தவறு தான் இதற்கு காரணம் என மருத்துவமனை ஒப்புக்கொண்டுள்ளது.
குழந்தைகள் மீட்கப்பட்டாலும், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க முறையான விசாரணைக்கு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இத்துடன் இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால், பதற்றத்தில் இருந்த பெற்றோருக்கு இறுதியில் நிம்மதி கிடைத்துள்ளது.



