
கோலாலம்பூர், ஜூலை 14 – மருத்துவர்களின் நிர்வாகப் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மருத்துவ ஆவணங்களை தானாகப் பதிவு செய்யும் முன்னோடி திட்டத்தை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கெஃப்லி அக்மட் (Datuk Seri Dr. Dzulkefly Ahmad), அரசு மருத்துவமனைகளை ‘ஸ்மார்ட் மருத்துவமனைகளாக’ மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். AI தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மருத்துவச் சேவைகளை மேலும் திறம்பட வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
முன்னோடி திட்டத்தின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அது வெற்றிகரமாக இருந்தால் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.
மேலும், ZTE மலேசியாவுடன் நடைபெற்ற சந்திப்பில், மருத்துவமனைகளின் இணைய வலையமைப்பை அதிவேக, மின்சாரச் சிக்கனமிக்க ஃபைபர் ஆப்டிக் இணைப்பாக மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், புதிய AI தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படும் மின்னணு மருத்துவப் பதிவேடு (EMR) அமைப்புடன் முழுமையாக இணக்கமாக செயல்படுவதை அமைச்சு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.



