
புத்ராஜெயா, ஏப்ரல்-29-நெகிரி செம்பிலான் அரசியலில் திடீர் திருப்பமாக, மாநில மந்திரி பெசாருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டுள்ள 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையை, பக்காத்தான் ஹராப்பான் (PH) கடுமையாகச் சாடியுள்ளது.
இதனை ஒரு “துரோகச் செயல்” என, பக்காத்தான் தொடர்புப் பிரிவு இயக்குநர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் வருணித்தார்.
மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையைக் குலைக்கும் வகையில் இந்த 14 பிரதிநிதிகளும் செயல்பட்டுள்ளனர்.
தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி, சுய இலாபத்திற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது ஒற்றுமை அரசாங்க உணர்வைப் பிரதிபலிக்கவில்லை என, ஃபாஹ்மி ஏமாற்றமும் வருத்தமும் தெரிவித்தார்.
14 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் பெரும்பான்மை இழந்துள்ளார்; எனினும் சமஸ்தானாதிபதியுடனான சந்திப்புக்குப் பிறகு தற்போதைக்கு பதவியில் தொடருவதாக அமினுடின் அறிவித்துள்ளார்.
இந்த அரசியல் மோதலால் நெகிரி மாநில நிர்வாகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இயங்கி வரும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல், ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தற்போது சிரம்பானில் இரு தரப்பினரும் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதால், மாநிலம் முழுவதும் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.
எனினும் தற்போதைக்கு திடீர் தேர்தல் வாய்ப்பில்லை என பிரதமர் கூறியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.



