
நேப்பாள், செப்டம்பர் 14 – நேப்பாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்ட 55 மலேசியர்களின் நிலையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. மலேசியாவின் சிறப்பு தேடல் மற்றும் மீட்புக் குழுவான SMART குழுவின் பணி நிறைவடைந்து, அக்குழுவினர் இன்று மலேசியா திரும்புகின்றனர் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
55 பேரும் இதுவரை தொடர்புகொள்ள முடியாதவர்களாகவே பதிவு செய்யப்பட்டுள்ளனர். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தால், முதலில் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அமைச்சு கூறியுள்ளது.
நேப்பாள அதிகாரிகள் தேடுதல் மற்றும் அடையாளம் காணும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நேப்பாள மீட்புக் குழுவினருக்கு ஆளில்லா விமானங்களை இயக்கும் பயிற்சியை வழங்கிய SMART குழு, பேரிடர் மீட்புப் பணிகளுக்காக ஒன்பது ஆளில்லா விமானங்களையும் நேப்பாள அரசிடம் ஒப்படைத்துள்ளது.
மலேசியத் தூதரகம் நேப்பாள அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளிடமிருந்து தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்கும். இதனிடையே, சீனாவில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் நிலையை அறியும் முயற்சிகளும் தொடருமென வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.



