
உலக வர்த்தகத்தில் வல்லரசு நாடுகள் விதிக்கும் ஒருதலைப்பட்சமான வரிகள் மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக, பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், இத்தகைய வர்த்தக நடைமுறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது வளரும் நாடுகளும் சாதாரண மக்களும்தான் என்றார்.
பிரிக்ஸ் தளம், மலேசியாவுக்கு ஒருசில நாடுகளை மட்டும் சார்ந்திருப்பதைக் குறைத்து, புதிய சந்தைகளைத் திறக்கவும், ஏற்றுமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவும் என அன்வார் குறிப்பிட்டார். இதன் பலன் இறுதியில் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றார்.
மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலகத் தலைவர்களால் அன்வார் பரஸ்பர மரியாதையோடு வரவேற்கப்பட்டார்.
பிரிக்ஸ் அமைப்பு 11 உறுப்பு நாடுகளையும் 10 பங்காளித்துவ நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. மலேசியா முழு உறுப்பிய நாடாக விண்ணபித்துள்ள நிலையில் தற்போது பங்காளித்துவ நிலையில் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய மாநாட்டுக்கு பின்னர் பிரதமர் தமது அடுத்தக் கட்ட பயணமாக கேரளம் சென்றார். அங்கு மாநில முதல்வர் மற்றும் ஆளுனரோடு இருவழி உறவு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின் இன்று மாலத்தீவு புறப்படவுள்ளார்.



