
நியூயோர்க், ஜூன்-3 – கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே, 1958-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டை ஏலத்திற்கு விடப்படவுள்ளது.
அப்போது வெறும் 17 வயதான பீலே, ஸ்வீடனை எதிர்த்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரண்டு கோல்களை அடித்து பிரேசிலுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். அந்தப் போட்டியில் அவர் அணிந்திருந்த எண் 10 சட்டையே தற்போது ஏலத்திற்கு வரவுள்ளது.
இந்த ஏலத்தை சோத்தெபீஸ் ( Sotheby’s ) நிறுவனம் நடத்துகிறது. சட்டை 6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக விலைக்கு விற்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கால்பந்து வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த நினைவுப் பொருட்களில் ஒன்றாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
போட்டி முடிந்த பின்னர் பீலே, அந்தச் சட்டையை தனது அணித்தோழரான டிடாவுக்கு நினைவுப் பரிசாக வழங்கியிருந்தார். பின்னர் அது அவரது குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்தச் சட்டை கடந்த 2002-ஆம் ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்டிருந்தாலும், தற்போது அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள் மற்றும் சேகரிப்பாளர்களின் கவனத்தை இந்த ஏலம் ஈர்த்துள்ளது.
வரும் ஜூன் 29-ஆம் தேதி தொடங்கும் ஆன்லைன் ஏலம் ஜூலை 16 வரை நடைபெறவுள்ளது.



