
கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-எல்லை தாண்டிய புகை மூட்டம் காரணமாக, நாட்டில் 12 இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது. நேற்று அப்பகுதிகளின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது.
இன்று பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, சராவாக்கில் 11 பகுதிகளில் API குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. Serianனில் மோசமாக API 190 ஆகப் பதிவாகியுள்ளது. Samarahan (169), Kuching (165), Bintulu (159), Samalaju (155), Mukah (154), Sibu (154), Sri Aman (154), Sarikei (153), Miri (146) மற்றும் ILP Miri (123) ஆகியவை பிற பகுதிகளாகும்.
சிலாங்கூரில் Johan Setia பகுதியில் API குறியீடு 152 ஆக உள்ளது. இவ்வேளையில் தீபகற்ப மலேசியாவில் 53 பகுதிகளில் API குறியீடு மிதமான நிலையில் பதிவாகியுள்ளன.
0 முதல் 50 வரையிலான API குறியீடு நல்ல காற்றுத் தரத்தையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையையும், 300-க்கு மேற்பட்ட குறியீடு ஆபத்தான நிலையையும் குறிக்கின்றன.
மற்றொரு நிலவரத்தில், அண்டை நாடான இந்தோனேசியா முழுவதும் 107,000 ஹெக்டேருக்கும் அதிகமான காடுகளும் நிலப் பகுதிகளும் தீ பரவலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் தீ விபத்துகளால் ஏற்படும் புகை மற்ற நாடுகளைப் பாதிப்பது குறித்த எந்தத் தகவலும் நேற்று வரை தங்களுக்குக் கிடைக்கவில்லை என இந்தோனேசியா கூறியுள்ளது.
சுமார் 43 ஹெலிகாப்டர்கள் வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. தேவைக்கேற்ப கூடுதலாக 10 முதல் 15 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரைப்பகுதியில் ஏராளமான பணியாளர்களும் உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆறு மாவட்டங்களில் மிகவும் முக்கியமான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அது தெரிவித்தது.
El Niño பருவநிலை காடு மற்றும் நிலப் பகுதித் தீச் சம்பவங்களை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்நிலை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத் தொடக்கம் வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



