
கோத்தா திங்கி, செப்டம்பர் – சிங்கப்பூரில் தொழிற்சாலை ஊழியராக பணியாற்றும் 25 வயதான ஆடவர், போலீஸ் போக்குவரத்து அதிகாரிக்கு படுகாயம் ஏற்படுத்தியதற்காகவும், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதற்காகவும் கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ஜாலான் யூசுப் பகுதியில் யமஹா மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டியதாக முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
அதே நாளில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு தெரிந்தே படுகாயம் ஏற்படுத்தியதாக இரண்டாவது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
குற்றச்சாட்டுகளை மறுத்த சந்தேக நபர் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ரிங்கிட் 5,000 பிணை வழங்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



