![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/mic.jpeg)
கோலாலம்பூர், ஜூன் 30 – ம.இ,காவின் உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் மாநில ம.இகா நிர்வாகக் குழுவுக்கான 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக ஜூலை 6ம் தேதி நாடு முழுவதிலும் பிற்கல் ஒரு மணி தொடங்கி மாலை 5 மணிவரை தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனை முன்னிட்டு அதன் தேர்தல் உதவி அதிகாரிகளுக்காக நேற்று ம.இ.கா தலைமையகத்தில் இரண்டாவது பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. ம.இ.க தேர்தல் உதவி அதிகாரிகளாக பணியாற்றும் புத்ரா, புத்ரி, மகளிர், இளைஞர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் இந்த பட்டறையில் கலந்துகொண்டனர். ம.இ.காவின் தலைமைச் செயலாளர் டத்தோ R.T ராஜசேகரன் இந்த பயிற்சி பட்டறையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
இந்த பயிற்சி பட்டறையில் ம.இ.கா தேர்தல் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் டத்தோ செல்வ மூக்கையா, தேர்தல் குழுவின் செயலாளர் டத்தோ ராஜகோபால் ஆகியோரும் விளக்கம் அளித்தனர். இந்த பட்டறையில் கலந்துகொண்ட புத்ரா பிரிவின் தேசிய துணைச் செயலாளர் புர்வின் ரவிச்சந்திரன் ( Purvin Ravichandran ), தேசிய புத்ரா துணைத்தலைவர் டாக்டர் அமர்வின் மலைராஜா ( Amarvin Malairaja ) புத்ரி பிரிவின் தேசிய தலைவியும் ஜோகூர் மந்திரிபுசாரின் சிறப்பு உதவியாளருமான வழக்கறிஞர் தீபா சோலைமலை ( Theepa Solaimalai) ஆகியோர் இப்பயிற்சியில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
ம.இ.கா தேர்தல் நாடு முழுவதிலும் 39 மண்டலங்களாக நடைபெறுகிறது. தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கு தேர்தல் குழுவின் அதிகாரிகளுக்கு துணையாக செயல்படுவதற்கான ஏற்பாட்டு நடவடிக்கையாக முதல் முறையாக இந்த பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டதாக டத்தோ ராஜேசேகரன் தெரிவித்தார்.