
ஈப்போ, மே-3- ம.இ.கா தோற்றுவிக்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, திட்டமிட்டபடி அனைத்து சிறப்பு நிகழ்வுகளும் மிகச்சிறப்பாக நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ T. முருகையா தெரிவித்துள்ளார்.
வரும் மே 21-ஆம் தேதி, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டுடன் இந்நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.
அதே நேரத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏக காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் என்றார் அவர்.
8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்விழாவில்
குடும்ப தினம் & விளையாட்டுப் போட்டிகள்,
மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
இந்தியச் சமுதாயத்திற்கு ம.இ.கா ஆற்றிய சேவைகள் குறித்த Town Hall Program கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதாக அவர் சொன்னார்.
தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் முழு ஆதரவோடும், பேரா மாநிலத் தலைவர் தான் ஸ்ரீ எம். ராமசாமி உள்ளிட்ட தலைவர்களின் ஒத்துழைப்போடும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பேராக், சுங்கை சிப்புட்டில் உள்ள துன் சாமிவேலு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பேரா மாநில தொகுதித் தலைவர்களின் சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு முருகையா இதனை உறுதிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் விக்னேஸ்வரி பாபுஜி மற்றும் டத்தோ கீதாஞ்சலி உள்ளிட்ட பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
கட்சியின் 80-ஆண்டு கால வரலாற்றுப் பயணத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்வுகளுக்குத் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாகவும் முருகையா மகிழ்ச்சித் தெரிவித்தார்.



