
சைபர்ஜெயா, ஜூன்-27 – தனது மாணவர் குடியிருப்பொன்றில் 20 வயது மாணவி கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த சைபர்ஜெயா பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது.
நடப்பிலுள்ள பாதுகாப்பு SOP நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய, பாதுகாப்பு நிபுணர்களுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக, நேற்று வெளியிட்ட அறிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியது.
மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் சுற்றத்தாரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என்றும் அது தெரிவித்தது.
இவ்வேளையில் மாணவியின் மரணம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கும் பல்கலைக்கழகம் ஒத்துழைத்து வருகிறது.
Maniishapriet Kaur Akhara எனும் அம்மாணவி செவ்வாய்க்கிழமை காலை இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததை செப்பாங் போலீஸ் உறுதிப்படுத்தியது.
எனினும் பரவலாகக் கூறப்பட்டது போல் அவர் கற்பழிக்கப்படவில்லை என்றும் போலீஸ் தெளிவுப்படுத்தியது.
எனினும் சம்பவ இடத்தில் அம்மாணவியின் மடிக்கணினி, கைப்பேசி, ATM வங்கி அட்டைகள், ரொக்கம் உள்ளிட்ட உடைமைகள் காணாமல் போயிருக்கின்றன.
மாணவியின் மரணத்துக்குப் பிறகு அவரின் ATM அட்டையைப் பயன்படுத்தி பல முறை பணம் மீட்கப்பட்டுள்ளதையும் போலீஸ் கண்டறிந்துள்ளது.
மாணவி கொல்லப்பட்ட சம்பவம், பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதிகள் அல்லது குடியிருப்புகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொது மக்கள் மத்தியில் கேள்வியையும் அச்சத்தையும் எழுப்பியுள்ளது