
ரவாங் உச்சிமலை முனிஸ்வரர் கோவில் இடிப்பு: சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-12,
மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிலாங்கூர், ரவாங்கில் உச்சிமலை முனீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வெச்சரிக்கை வந்துள்ளது.
அச்சம்பவத்தில், அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறப்படும் அக்கோவிலை இடித்ததாகக் கூறி 4 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
போலீஸார் ஒரு backhoe மண்வாரி இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், மலேசிய சீன வணிகர் சங்கத்தின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பேசிய அன்வார், _“நாடு சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்; தனிப்பட்ட உணர்ச்சிகள் அல்லது விருப்பங்களின் அடிப்படையில் அல்ல”_ என்று வலியுறுத்தினார்.
நீதியை சட்டத்தின் வழியே தேட வேண்டும்; மாறாக தனிநபர் நடவடிக்கைகள் மூலம் அல்ல என அவர் நினைவுறுத்தினார்.
எனவே, எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அமுலாக்கங்கள் அரசு நிறுவனங்களால் மட்டுமே மேற்கொள்ளப்படும்; அதிருப்தி இருந்தால் வழக்குகள் நீதிமன்றம் செல்லட்டும்.
அதை விடுத்து, ஏதோ ஒரு சிறு குழுவினரால் நாட்டின் நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது என பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.



