
கோலாலம்பூர், மே 15 – உலு லங்காட்டில் உள்ள தாமான் ஸ்ரீ நன்டிங்
Taman Sri Nanding, பகுதியில் அமைந்துள்ள சுங்கை லங்காட்டின் துணை நதியில் நீரின் கலங்கல் தன்மை அதிகரித்துள்ளதை Luas எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கண்டறிந்துள்ளது.
நேற்று பிற்பகல் மணி 3.40க்கு நடந்த இந்த சம்பவத்தினால் சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பாதிக்கக்கூடும் என்று LUAS கூறியது.
சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மணல் அள்ளும் நடவடிக்கைகளால் இந்த அதிக கலங்கல் தன்மை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
1999 ஆம் ஆண்டின் சிலாங்கூர் நீர் வாரியச் சட்டத்தின் பிரிவு 121(1)-இன் கீழ், அந்த வளாகத்தின் செயல்பாடுகளை நிறுத்தி, மணல் வெளியேற்றக் கட்டுப்பாட்டை உடனடியாகச் செயல்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுங்கை லங்காட்டில் சில பகுதிகளில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்காக மலேசிய இரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக LUAS வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.



