
கோலாலம்பூர், ஜூன்-6 – உள்ளூர் வணிகங்களை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவது அல்லது வணிக உரிமங்கள் மற்றும் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக, அவர்கள் உள்ளூர்வாசிகளாக இருந்தாலும் சரி, வெளிநாட்டினராக இருந்தாலும் சரி, கடுமையான அமுலாக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டினர் உள்ளூர் வணிக நடவடிக்கைகளை ஆக்கிரமித்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
அவ்வகையில், சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் மலேசிய குடிமக்கள் உட்பட எவராயினும் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த உத்தரவு குறிப்பிட்ட பகுதியையோ அல்லது குழுவையோ மட்டும் குறிவைத்தது அல்ல என்றும் ஃபாஹ்மி மேலும் விளக்கினார்.



