
தங்காக், மார்ச்-15-“வலையில் சிக்க வைத்து என் மகனைக் கொன்று விட்டார்கள்!”
ஜோகூர், தங்காக்கில் பொது மக்கள் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட 38 வயது ஆடவர் Tong Wei Sheng குறித்த அவரது தாயின் குமுறல் அது…
“‘இக்கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சம்பவம் நடந்த நாளில், என் மகன் ஒருவரைச் சந்திக்க உணவகத்திற்குச் செல்லப் போவதாக குடும்பத்தாரிடம் தெரிவித்தார். அவர்களைச் சந்தித்தபோது, ‘எல்லாம் சரி, எதுவும் நடக்கவில்லை’ என்று எனக்கு செய்தி அனுப்பினார். ஆனால் சில மணி நேரம் கழித்து, அவர் காயமடைந்தார் என்ற அழைப்பை நான் பெற்றேன்” என Kim என மட்டும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 62 வயது தாய் கூறினார்.
“இந்த சந்திப்பு என் மகனின் உயிரை முடிக்க திட்டமிடப்பட்ட வலையாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை” என்றார் அவர்.
குடும்பம் அமைதியாக இருக்காது; மகனுக்கான நீதியை நிச்சயமாக கோருவோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மார்ச் 14-ஆம் தேதி மாலை, 3 பேர் பாராங் கத்தியுடன் துரத்தி, ஓர் உணவகத்தின் முன் Wei Sheng-கை சரமாரியாக வெட்டினர்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சைப் பலனளிக்காது உயிரிழந்தார்.
வெள்ளை நிற காரரொன்றில் தப்பிச் சென்றக் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
இச்சம்பவம் முன்னதாக வைரவலாகி சமூக ஊடகங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



