
வெளிநாட்டவர்கள் மலேசியாவில் மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க போலி கடப்பிதழ்களைத் தருவிக்கும் கும்பல் சிக்கியது
கோலாலம்பூர், பிப்ரவரி-14,
மலேசியாவில் கட்டாய மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில், போலி கடப்பிதழ்களைத் தருவிக்கும் கும்பலை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
குடிநுழைவுத் துறை நடத்திய சோதனை நடவடிக்கையில், கோலாலம்பூர் செந்தூலில் 27 வயது வங்காளதேச மாணவர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டார்.
விசாரணையில், இந்த கும்பல் FOMEMA மருத்துவ பரிசோதனையில் தேறாத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு போலியான அல்லது மாற்றியமைக்கப்பட்ட கடப்பிதழ்களை வழங்கி, அவர்கள் மருத்துவ ரீதியாக தகுதியானவர்கள் என பொய்யாகக் காட்டியது தெரியவந்துள்ளது.
சோதனையில் 22 போலி கடப்பிதழ்கள், கணினிகள், அச்சு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களை மாற்ற பயன்படும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 6 மாதங்களில் மாதத்திற்கு 200 முதல் 300 வரையிலான போலி கடப்பிதழ்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைதுச் செய்யப்பட்ட நபர் புத்ராஜெயா குடிநுழைவு அலுவலகத்தில் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கும்பலைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



