கோலாலம்பூர், ஏப்ரல் 16 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC தாம் முறைகேடு செய்திருப்பதாக குற்றம் சாட்டுவதாக முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட் கூறியுள்ளார்.
தனது மகன் Mirzan-னுக்கு MACC அனுப்பியிருக்கும் நோட்டீசில், தம் பெயரை நேரடியாகவே குறிப்பிட்டு அவ்வாணையம் அதனை உறுதிச் செய்துள்ளதாக மகாதீர் தெரிவித்தார்.
தனது அடையாள அட்டை எண்களும் அதில் இடம்பெற்றிருப்பதாக அவர் சொன்னார்.
“நான் அறிந்த வரை, என்னை யாரும் விசாரித்ததில்லை; அப்படியிருக்க நான் குற்றமிழைத்திருப்பதாக MACC நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருப்பது ஏன்?” என அந்த முதுபெரும் அரசியல்வாதி கேள்வி எழுப்பினார்.
கோடிக்கணக்கில் சொத்துகளைக் குவித்திருப்பதாக காலங்காலமாகவே என் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன; ஆனால் ஒருமுறை கூட அவை நிரூபிக்கப்படவில்லை.
எனவே தாம் நிரபராதி எனக் கூறிக் கொண்ட மகாதீர், ஆதாரங்கள் இருந்தால் அவற்றை MACC வெளியிட வேண்டும் என்றார்.
சொத்து விவரங்களை அறிவிப்பது தொடர்பில் முன்னதாக MACC விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மகாதீரின் இரு மூத்த மகன்களான Tan Sri Mokhzani-யும் Mirzan-னும், அந்த ஊழல் தடுப்பு ஆணையம் உண்மையில் குறி வைத்திருப்பது தங்களது தந்தையைத் தான் என Bloomberg நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாதீர் பிரதமரான ஆண்டான 1981-ல் இருந்து தாங்கள் வாங்கிப் போட்ட சொத்துகளை ஒன்று விடாமல் அறிவிக்க வேண்டும் என அவ்விருவரையும் MACC உத்தரவிட்டிருக்கிறது.