கோலாலம்பூர், பிப் 8 – திரெங்கானு சுல்தானாநூர் ஸாஹிராவுக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால சிறைத் தண்டனைக்கு எதிராக சரவா ரிப்போர்ட் இணையத்தள பதிவேட்டின் ஆசிரியர் கிளேர் ரியூகேஸல் – பிரவுன் மேல் முறையீடு செய்யவிருக்கிறார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யும்படி பிரவுன் தம்மை பணித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் குவோக் ங்கெக் சேயோங் தெரிவித்தார். மேலும் சட்டவிரோதமான மற்றும் விதிமுறைக்கு எதிராக நிதிமன்றத்தின் முடிவை சரி செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் திருத்த அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு தமது கட்சிக்காரர் கேட்டுக்கொண்டதாகவும் குவோக் கூறினார்.
லண்டனில் பிரவுன் எங்கு இருக்கிறார் என்பது போலீசிற்கு தெரியும், அப்படியிருந்தும் அவரை விசாரணைக்காக இங்கு போலீசார் கொண்டு வரவில்லை என அவர் தெரிவித்தார். வழக்கு தொடர்பாக நீதிமன்றம் வரத்தவறியதற்காக ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் குற்றஞ்சாட்டப்பட்ட பிரவுன் திரெங்கானு மாஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகத நிலையில் மாஜிஸ்திரேட் நிக் முகமட் தார்மிஸி நிக் முகமட் சுக்ரி இரண்டு ஆண்டு சிறை தண்டனையை விதிப்பதாக நேற்று தீர்ப்பளித்தார். அவருக்கு எதிரான தண்டனை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். குற்றவியல் சட்டத்தின் 500ஆவது விதியின் கீழ் பிரவுன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.