![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-18-Feb-2024-12-40-PM-338.jpg)
உலகை உலுக்கி வரும் உணவுப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தென் கொரிய விஞ்ஞானிகள் ‘அசைவ அரிசி’ தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
சியோலின் Yonsei பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுக்கூடத்தில் மாட்டிறைச்சி மற்றும் கொழுப்பு செல்களை அடங்கிய இந்த அசைவ கலவை அரிசியை உருவாக்கியுள்ளனர்.
இளஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ள இவ்வகை அசைவ அரிசி மாமிசத்தை விட மலிவாகவும் சுற்றுச் சூழலுக்கு குறைந்த பாதிப்பையும் ஏற்படுத்தும் வகையிலும் கிடைக்கும்.
கால்நடைகளை வளர்க்க அதிக இடங்கள் தேவைப்படுவதோடு கரியமிலவாயுவும் அதிகம் வெளியேற்றப்படுகிறது. ஆனால் அரிசியிலேயே நமக்கு தேவைப்படும் புரதச் சத்தை கலந்து புதிய வகை அரிசியை உருவாக்கினால் நாம் அந்த பிரச்சனையைக் குறைக்க முடியும் என்கின்றனர் Yonsei பல்கலைக்கழக விஞ்ஞானிகள். அதன் முயற்சியாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த அசைவ அரிசி என்கின்றனர்.
இந்த கலவை அரிசியை ஆய்வுக்கூடத்தில் தயாரிக்க 11 நாட்கள் தேவைப்பட்டுள்ளது.இதில் இயற்கை அரிசியை விட 8 விழுக்காடு கூடுதல் புரதச் சத்தும் 7 விழுக்காடு கொழுப்புச் சத்தும் உள்ளது. இதனால் நாம் இறைச்சியை உண்ணும் அளவை கணிசமாக குறைக்க முடியும் என அவர்கள் கூறுகின்றனர். அதேசமயத்தில் மாட்டிறைச்சியை விட சுமார் 6 மடங்கு குறைந்த விலையில் இந்த அரிசி கிடைப்பது தென் கொரிய மக்களுக்கு நல்ல செய்தி.
எதிர்காலத்தில் வறட்சி காலங்களில், ராணுவத்தில் மற்றும் விண்வெளியில் பயன்படுத்த ஏதுவாக இந்த அசைவ அரிசி பெரும் பங்காற்றும என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.