![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-19-Mar-2024-07-10-PM-7265.jpg)
அம்பாங் ஜெயா, மார்ச் 19 – தங்க கட்டிகளை வாங்க சென்ற உணவக உரிமையாளர் ஒருவரிடமிருந்து, மூன்று லட்சம் ரிங்கிட்டை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நான்கு ஆப்பிரிக்க ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்களுக்கு உடந்தையாக இருந்த மூன்று பெண்கள் இதுவரை கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை ; டத்தோ பட்டம் கொண்ட உள்ளூர் ஆடவன் ஒருவனும் அடையாளம் காணப்பட்டு வருகிறான்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் அந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞரும் அவரது நண்பரும், மேலவத்தி பேரங்காடியில் உள்ள உணகவம் ஒன்றில், தங்க கட்டிகளை வாங்குவதற்காக, பெண் ஒருவரையும், டத்தோ பட்டத்தை கொண்ட உள்ளூர் ஆடவனையும் சந்தித்துள்ளனர்.
அதன் பின்னர், தங்க கட்டிகளை பெறுவதற்காக, அவர்கள் புரோட்டோன் Gen 2 ரக காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலவத்தி பேரங்காடியை முன்று முறை வலம் வந்த அக்கார் பின்னர் ஜாலான் G1 சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதும், எங்கிருந்தோ வந்த நான்கு ஆப்பிரிக்க ஆடவர்கள், துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு, பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது நண்பரின் கண்ணில் மிளகை தூவிவிட்டு, அவர்கள் வைத்திருந்த மூன்று லட்சம் ரிங்கிட் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக, அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் அஜாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதன் பின்னர், பாதிக்கப்பட்ட நபர் செய்த புகாரின் அடிப்படையில், அவர்கள் பேரங்காடியில் சந்தித்த பெண், அம்பாங் ஜெயாவிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் கைதான வேளை ; அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மறுநாள் மேலும் இரு பெண்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட டத்தோ பட்டம் கொண்ட உள்நாட்டு ஆடவனையும், நான்கு ஆப்பிரிக்க ஆடவர்களையும் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.