![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/WhatsApp-Image-2023-11-29-at-1.04.15-PM.jpeg)
கோலாலம்பூர், நவ 29 – பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில் உண்மையாக இல்லையென்றால் அரசாங்கத்திலுள்ள உறுப்புக் கட்சிகள் விலகிக் கொள்ளலாம் என சிலாங்கூர் பி.கே.ஆர் விடுத்த கோரிக்கையை ம.இ.கா சாடியது. சிலாங்கூர் பி.கே.ஆர் இளைஞர் பிரிவு தலைவர் இசுவான் காசிம் தெரிவித்திருந்த அந்த கருத்து எந்தவொரு அரசியல் மாநாடுகளிலும் வழக்கமான ஒன்றுத்தான் என ம.இ.கா உதவித் தலைவரான செனட்டர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார். எந்தவொரு விவாதங்களிலும் பேராளர்கள் தங்களை ஹீரோவாக காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். பி.கே.ஆர் பிரதிநிதியும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே இந்த விவகாரத்தை ம.இ.கா பொருட்படுத்தாது என அவர் கூறினார். ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன், தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ M. சரவணன் உட்பட கட்சியின் தலைமைத்துவம் அன்வாருடன் சிறந்த நல்லுறவை கொண்டிருப்பதாக மோகன் தெரிவித்தார். அன்வார் தலைமையிலான அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு தொடர வேண்டுமென எங்களது பொதுப் பேரவை கூட்டத்தில் முடிவு செய்தோம் என்றும் மோகன் கூறினார்.
தங்களது ஆதரவில் உண்மையில்லை என்றால் உறுப்புக் கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என கடந்த வாரம் நடைபெற்ற PKR தேசிய மாநாட்டில் இசுவான் ஆலோசனை கூறியிருந்தார். ம.இ.காவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ம.இ.கா தயங்காது என டத்தோஸ்ரீ சரவணன் கூறியிருந்தது குறித்து இசுவான் கருத்துரைத்தார். அன்வாரின் அரசாங்கம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சரவணணின் எச்சரிக்கையை ஆக்கப்பூர்வமான ஒன்றாக கருத வேண்டும் என மோகன் கூறினார். அரசாங்கத்தில் ம.இ.காவின் பங்கை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது வழக்கமான ஒன்றாகும். அதனை எங்களின் மிரட்டலாகவோ அல்லது நெருக்குதலாகவோ கருத வேண்டியதில்லையென டத்தோ டி .மோகன் விவரித்தார்.